செய்திகள் தமிழ் தொடர்புகள்
அதிமுக-வை கரகாட்டக்காரன் கார் போல ஆக்கிவிட்டார் பழனிசாமி; எஸ்ஐஆரை எதிர்த்தால் இரட்டை இலையை முடக்கிவிடுவார்கள்: உதயநிதி ஸ்டாலின்
வேலூர்:
எஸ்ஐஆரை எதிர்த்தால் இரட்டை இலையை முடக்கி விடுவார்கள் என்று அதிமுகவுக்கு பயம் என திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூரில் திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, ‘‘இங்கு, மாவட்டச் செயலாளர் பேசுகையில், என்னை கைராசிக்காரர் என்றார். அதில், சின்னத் திருத்தம்... எனக்கு ராசிகளில் நம்பிக்கை இல்லை. அதிலும் கைராசியில் நம்பிக்கை இல்லை. ஆனால் கை மீது நம்பிக்கை இருக்கிறது. அதாவது உங்கள் உழைப்பின் மீது இருக்கிறது. வேறு எந்தக் கையும் இல்லை.
நாம் 75-வது ஆண்டை நிறைவு செய்து 76-வது ஆண்டில் சென்று கொண்டிருக்கிறோம். இந்த, 75 ஆண்டுகளில் எத்தனையோ சவால்கள், துரோகங்களை திமுக சந்தித்துள்ளது. அவை அனைத்தையும் வெற்றிகொண்டு கருப்பு, சிவப்பு கொடி கம்பீரமாகப் பறப்பதற்கு நீங்கள்தான் காரணம். தான் சந்தித்த அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றிபெற்ற ஒரே தலைவர் உலகத்திலேயே கருணாநிதி மட்டும் தான். அவரைப் போல் நமது தலைவரும் தான் தலைவராகி சந்தித்த அத்தனை தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார். அதற்கும் உங்கள் உழைப்புதான் காரணம்.
பிரதமர் மோடி, பிஹார் தேர்தல் பிரச்சாரத்தில் சம்பந்தமே இல்லாமல் தமிழ்நாட்டைப் பற்றி பேசுகிறார். தமிழ்நாட்டில் பிஹார் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை; அங்கே அவர்களை துன்புறுத்து கிறார்கள் என்று பேசுகிறார். தான் இந்திய ஒன்றியத்துக்கே பிரதமர் என்பதை மறந்து மக்களுக்குள், மாநிலங்களுக்குள் சண்டையை மூட்டிவிட முயற்சிக்கிறார். இப்படித்தான் ஒடிஷா தேர்தலின் போது, கோயில் சாவியை திருடிவிட்டு தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டார்கள் என்று சொன்னார். பிரதமரின் இத்தகைய வெறுப்புப் பேச்சுக்கு முதல்வர் கண்டனம் தெரிவித்தார். இதற்குக்கூட கண்டனம் தெரிவிக்காமல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தாலும் நாங்கள் பாஜக-வை ஆதரிப்போம் என்று கூறும் ஒரே இயக்கம் அதிமுக தான். இது தமிழ்நாட்டுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம். இதை எல்லாம் மக்களிடம் நாம் கொண்டு செல்ல வேண்டும். எஸ்ஐஆரை எதிர்த்தால் இரட்டை இலையை முடக்கி விடுவார்கள் என்று அதிமுக-வுக்குப் பயம். பழனிசாமிக்கு தெரிந்ததெல்லாம் ஒன்று, காலில் விழுவது, இன்னொன்று, அடுத்தவர் காலை வாரி விடுவது. தமிழ்நாட்டை காப்பாற்றப் போவதாகச் சொல்லி பஸ்ஸை எடுத்துக்கொண்டு புறப்பட்டபோதே சொன்னேன், போகப்போக ஒவ்வொருவராக இறங்கிவிடுவார்கள். கடைசியில் நீங்களும் டிரைவரும்தான் இருப்பீர்கள் என்று. அதுதான் இன்று நடக்கிறது. ஒரு நாள், பழனிசாமியை நீக்கிவிட்டதாக அவரே அறிக்கை விடுவார்.
அதிமுக-வை கரகாட்டக்காரன் கார் போல ஆக்கிவிட்டார் பழனிசாமி. ஆக்சிடென்ட் ஆன கார் மாதிரித்தான் இன்று அதிமுக நிலைமை இருக்கிறது. சசிகலா, ஓபிஎஸ், டிடிவியை எல்லாம் திமுகவின் பி டீம் எனச் சொல்லிவிட்டார் பழனிசாமி. நான் சொல்கிறேன், தொண்டர்களாகிய நீங்கள் இருக்கும் வரை திமுக-வுக்கு பி டீமும் தேவையில்லை, சி டீமும் தேவையில்லை” என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 5, 2025, 5:08 pm
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
November 4, 2025, 5:04 pm
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மூவர் கைது
November 2, 2025, 5:26 pm
இன்று கல்லறை திருநாள், நாளை முகூர்த்தநாள்: கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் உயர்வு
November 2, 2025, 11:19 am
அதிமுக தலைமைக்கு எதிராக யார் துரோகம் செய்தாலும் நடவடிக்கை: செங்கோட்டையன் நீக்கம் குறித்து இபிஎஸ் விளக்கம்
October 31, 2025, 11:51 am
‘செந்தமிழர் சீமான்’ என்று வாழ்த்தி முழக்கமிட்ட வைகோ: தொண்டர்கள் மகிழ்ச்சி
October 29, 2025, 5:59 pm
