நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இந்தியாவில் ஆஸ்திரேலிய வீராங்கனைகளிடம் பாலியல் சீண்டல்: மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் விளையாட வந்தவர்களிடம் அத்துமீறல்

இந்தூர்: 

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி விளையாட மத்தியபிரதேசம் சென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகளை ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. 

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் திடலில் கடந்த புதன்கிழமை ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளிடையேயான போட்டி நடைபெற்றது. 

நேற்று நடந்த கடைசிப்போட்டியில், தென்ஆப்பிரிக்காவுடன் ஆஸ்திரேலிய அணி மோத இருந்தது. இதற்காக ஆஸ்திரேலிய அணி வீராங்கனைகள் அக்.17ஆம் தேதி முதல் இந்தூரில் உள்ள ரேடிசன் புளூ ஓட்டலில் தங்கி உள்ளனர்.

ஆஸ்திரேலிய வீராங்கனைகள் இரண்டு பேர் நேற்று முன்தினம்(24ம் தேதி) காலை 11 மணி அளவில் ஓட்டலுக்கு அருகேவுள்ள ரிங் சாலையில் இருக்கும் ஒரு கபேவுக்கு சென்று விட்டு மீண்டும் ஓட்டலுக்கு திரும்பி நடந்து சென்று கொண்டு இருந்தனர். 

அப்போது இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த ஒருவர் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் மீது பாலியல் ரீதியாக தாக்குதல் நடத்தியதுடன், அவர்களின் உடல்களில் விரும்பத்தகாத இடங்களில் தொட்டார். மேலும் பெண் வீராங்கனைகளை கட்டிப்பிடிக்கவும் முயன்றுள்ளார். 

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வீராங்கனைகள் உடனே தங்கள் அணியின் பாதுகாப்பு மேலாளர் டேனி சிம்மன்சுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர். 

அவர்கள் இருக்கும் லொக்கேஷனை ஷேர் செய்துவிட்டு, கட்டிப்பிடிக்கவும், அத்துமீறவும் முயன்ற நபரை எதிர்த்து நின்றனர். இதையடுத்து பைக்கில் வந்த நபர் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.

ஆஸி வீராங்கனைகள் அவர்கள் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் இருந்தபோது, இந்த சம்பவம் நடந்துள்ளது. 

அவர்களை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த அந்த நபர் சுமார் 30 வயதுடையவர், வெள்ளை சட்டையும் கருப்பு தொப்பியும் அணிந்திருந்தார். ஹெல்மெட் இல்லாமல் கருப்பு நிற பைக்கில் வந்துள்ளார். 

இதற்கிடையே அணி பாதுகாப்பு மேலாளர் டேனி சிம்மன்ஸ் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். 

உயர் அதிகாரிகள் உடனே செயல்பட்டு அணியின் தொடர்பு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, வீரர்களுக்கு உதவ பைலட் போலீசார் வீராங்கனைகள் அனுப்பிய லொக்கேஷன் இடத்திற்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. 

பின்னர் ஒரு காவல் ரோந்துப் பிரிவு சம்பவ இடத்திற்கு சென்று கிரிக்கெட் வீரங்கனைகளை பாதுகாப்பாக ஓட்டலுக்கு அழைத்துச் சென்றது.

போலீசார் வந்ததும் பாதுகாப்பு மேலாளர் சிம்மன்சுக்கு அந்த வீராங்கனைகள் உள்ளூர் போலீசார் வந்து விட்டனர். எங்களை அழைத்துக்கொண்டு ஓட்டலுக்கு வருகிறார்கள் என்று மீண்டும் செல்போனில் தெரிவித்தனர். 

இதுபற்றி ஆஸி அணியின் பாதுகாப்பு மேலாளர் டேனி சிம்மன்ஸ் வியாழக்கிழமை மாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்,

அதைத் தொடர்ந்து பிஎன்எஸ் பிரிவுகள் 74 மற்றும் 78ன் கீழ் தாக்குதல் அல்லது குற்றவியல் பலத்திற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேலும் இந்தூர் போலீசார் அப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் சந்தேக நபரின் பைக் எண்ணை வைத்து ஆஸி கிரிக்கெட் வீராங்கனைகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய நபரை கைது செய்தனர். 

அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset