செய்திகள் தமிழ் தொடர்புகள்
சிறுவன் கடத்தல்: நீதிமன்றத்திலேயே கைது செய்யப்பட்ட எடிஜிபி ஜெயராம்
சென்னை:
காதல் திருமணம் செய்து கொண்டவரின் தம்பியான சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் சீருடையில் ஆஜரான ஆயுதப்படை ஏடிஜிபி ஜெயராம் உயர்நீதிமன்ற வளாகத்திலேயே கைது செய்யப்பட்டார்.
பணியில் உள்ள எடிஜிபியை கைது செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்திய இந்த சம்பவம் அரசு, அதிகாரிகள், அரசியல்வாதிகள் மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வழக்கில் கட்டப்பஞ்சாயத்து செய்த புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் எம்எல்ஏவுமான பூவை ஜெகன்மூர்த்திக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
திருவள்ளூர் மாவட்டத்தைசேர்ந்த தனுஷும்(23), தொழிலதிபரான வனராஜாவின் மகள் விஜயும் (21) காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வனராஜா மகளை மீட்க காவல் உதவி ஆய்வாளராக இருந்த மகேஸ்வரி மூலமாக பூவை ஜெகன்மூர்த்தியின் உதவியை நாடியுள்ளார்.
வனராஜா,மகேஸ்வரி ஜூன் 6-ஆம் தேதி தனுஷ் வீட்டுக்கு சைரன் வைத்த எடிஜிபி காரில் சென்று தனுஷின் தாயை மிரட்டி 17 வயது இளைய மகனை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
போலீஸில் தனுஷின் தாய் இதுகுறித்து புகார் கொடுத்த நிலையில், சிறுவனை கடத்தி சென்றவர்கள் அவனை மறுநாள் அதிகாலை சென்னை மீனம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர்.
கடத்தல் சம்பவம் தொடர்பாக தொழிலதிபர் வனராஜ், அவரது உறவினர்கள் மணிகண்டன், கணேசன், மகேஸ்வரி, வழக்கறிஞர் சரத்குமார் ஆகிய 5 பேரை கடந்த 13-ம் தேதி போலீஸார் கைது செய்தனர்.
ஜெகன்மூர்த்தி முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி வேல்முருகன் திங்கள்கிழமை விசாரித்தார்.
அப்போது போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் ஏ.தாமோதரன், இந்த சம்பவம் நடந்தபோது, முன்னாள் காவல் அதிகாரி மகேஸ்வரியும், ஜெகன்மூர்த்தி எம்எல்ஏவும் பூந்தமல்லியில் உள்ள ஓட்டலில் இரவு 11 மணி முதல் அதிகாலை 1 மணி வரை பேசியுள்ளனர். கடத்தலுக்கு ஏடிஜிபி டிஜிபி ஜெயராம் தனது காரை கொடுத்து அனுப்பியுள்ளார். போலீஸார்தான் அந்த வாகனத்தை ஓட்டியுள்ளனர். இந்த கடத்தலில் அதிக அளவில் பணம் கைமாறியுள்ளது. ஜெகன்மூர்த்தியை விசாரித்தால் உண்மைகள் தெரியும் என்றார்.
இதையடுத்து, எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராம் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். ஏடிஜிபி ஜெயராம் 2.30 மணிக்கு ஆஜரானார். வழக்கறிஞர்கள் புடைசூழ வந்த ஜெகன்மூர்த்தி 3.45 மணிக்கு ஆஜரானார். அப்போது, எம்எல்ஏ ஜெகன்மூர்த்தியிடம் நீதிபதி வேல்முருகன், உங்களை நம்பி 80 ஆயிரம் பேர் வாக்களித்துள்ளனர். நீங்கள் யார், என்ன செய்கிறீர்கள் என்றெல்லாம் அவர்களுக்கு தெரியட்டும் என்றுதான் ஆஜராக உத்தரவிட்டேன். ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் சம்பாதிக்கத்தான் மக்கள் உங்களை தேர்ந்தெடுத்தார்களா? காதல் திருமணம் செய்ததற்காக வீடு புகுந்து மிரட்டி, சிறுவனை கடத்துவீர்களா?
சட்டம் இயற்றும் இடத்தில் உள்ள நீங்கள் சட்டத்தை மதித்து நடந்திருக்க வேண்டும். மாறாக, 2 ஆயிரம் பேரை நிறுத்தி போலீஸ் விசாரணைக்கு இடையூறு செய்துள்ளீர்கள்.
அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தால் நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது. இந்த வழக்கில் ஏடிஜிபிக்கு தொடர்பு இருப்பது கண்கூடாக தெரிந்தும், அவரது பெயரை எஃப்ஐஆரில் ஏன் சேர்க்கவில்லை. அவர் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளது.
எனவே, ஏடிஜிபி ஜெயராமை கைது செய்து, அவரிடம் போலீஸார் விசாரிக்க வேண்டும். அதேபோல, எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தியும் கூட்டத்தை கூட்டாமல் தனியாக போலீஸ் விசாரணைக்கு சென்று ஒத்துழைப்பு தரவேண்டும்.இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூன் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். ஏடிஜிபி ஜெயராமை உயர் நீதிமன்றத்திலேயே போலீஸார் கைது செய்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 16, 2026, 9:57 am
சென்னையில் வாகனங்களுக்கான எல்பிஜி, சிஎன்ஜி எரிவாயுக்கள் கிடைக்காததால், ஓட்டுநா்கள் கடும் அவதி
April 16, 2026, 9:19 am
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வு நிறைவு: கோடை விடுமுறை இன்று தொடங்குகிறது
April 14, 2026, 6:47 pm
தேர்தல் நாள் அண்மைய தகவல்களை செயலியில் பதிவு செய்ய தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி
April 14, 2026, 4:35 pm
விபரீதத்தில் முடிந்த குடும்பத் தகராறு: பெண் காவலரை கத்தியால் குத்திய கணவர் கைது
April 14, 2026, 4:18 pm
பக்தர்களின் வெள்ளத்தில் மிதந்த சமயபுரம்: சித்திரை திருவிழாவின் சிகரமான தேரோட்டம் இனிதே நிறைவு
April 13, 2026, 8:51 pm
