நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

சென்னை விமான நிலைய 2ஆவது ஓடுபாதைக்காக கட்டிடங்கள், செல்போன் கோபுரங்கள் அகற்றம்: இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு

சென்னை: 

சென்னை விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிக்காக, விமான நிலைய ஆலோசனைக் குழு (ஏர்போர்ட் அட்வைஸரி கமிட்டி) கூட்டம் சென்னை விமான நிலையத்தில் தலைவர் டி.ஆர்.பாலு எம்பி தலைமையில் நேற்று நடந்தது. 

கூட்டத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், விமான நிலைய உயர் அதிகாரிகள், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களின் கலெக்டர்கள், உயர் அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 

விமான நிலையத்தின் பின்பகுதியில் கொளப்பாக்கம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், இரண்டாவது ஓடு பாதைக்கு அருகே உயர்ந்த கட்டிடங்கள், மரங்கள், செல்போன் டவர்கள், மின் கோபுரங்கள் அதிக அளவில் உள்ளன. இது விமான போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது என்று இந்திய விமான நிலைய ஆணையம் தரப்பில் எடுத்துக் கூறப்பட்டது.

முன்னதாக இந்த தடைகளை அகற்ற இந்திய விமான நிலைய ஆணையமும், உள்ளாட்சி அமைப்புகளும் எடுத்த நடவடிக்கையில், 133 தென்னை மரங்கள், 7 செல்போன் டவர்கள், மொத்தம் 140 தடைகள் அகற்றப்பட்டன. அதன்பின்பு அந்த பகுதியில் மீண்டும் உயர்ந்த மரங்கள் வளர்ந்து விடக்கூடாது என்பதற்காக, இந்திய விமான நிலைய ஆணையம் அப் பகுதியில் குடியிருக்கும் கிராம மக்களுக்கு, உயரம் குறைவாக வளரும் “கங்கா பாண்டம்” என்ற வகை, தென்னை மரக்கன்றுகளை இலவசமாக வழங்கினார்கள். 

அதோடு உயரமான கட்டிடங்களை சுமார் 2 மீட்டர் உயரம் குறைக்கவும் அறிவுறுத்தப்பட்டது. 

அதுபோன்ற கட்டிடங்களுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் நோட்டீஸ் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

தடைகள் முழுமையாக அகற்றப்பட்டு, விமான நிலையத்தில் இரண்டாவது ஓடு பாதை, முழுமையாக பயன்படுத்தும் நிலை விரைவில் வந்துவிடும் என்று இந்திய விமான நிலைய ஆணையம் எதிர்பார்த்தது.

ஆனால் 2024ஆம் ஆண்டு கணக்கெடுப்பில், விமான போக்குவரத்துக்கான தடைகள் அதிகரித்து, தற்போது, 278 தடைகளாக உள்ளன. 

அதில் 53 தடைகள் செல்போன் டவர்கள், உயரமான மரங்கள், புதிதாக உருவாகியுள்ள கட்டிடங்கள் ஆகியவை அடங்குகின்றன. 

அதோடு விமான நிலையம் சம்பந்தப்பட்ட 18 கட்டிடங்களும் இருக்கின்றன. 

இவை அனைத்தையும் விரைவில் அகற்ற மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய விமான நிலைய ஆணையம் தரப்பில், அட்வைசரி கமிட்டி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இதுபோன்ற தடைகள் இருப்பதால், 2வது ஓடு தளத்தை, விமானங்கள் முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை இருக்கிறது. 

இது சென்னை விமான நிலையத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும் இந்திய விமான நிலைய ஆணையம் தரப்பில் எடுத்துக்கூறப்பட்டது. 

இதை தொடர்ந்து, கூட்டத்தில் கலந்துகொண்ட எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட ஆட்சியர்கள், உள்ளாட்சி நிர்வாகிகள், கிராம மக்களுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாத விதத்தில், விமான போக்குவரத்து தடைகள் அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset