செய்திகள் தமிழ் தொடர்புகள்
கொட்டி தீர்த்த மழையால் நிலைகுத்தியது மதுரை
மதுரை:
மதுரையில் கொட்டி தீர்த்த கனமழையால் மாசி வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கர்டர் பாலம் உள்ளிட்ட தாழ்வான இடங்களில் கார் உள்ளிட்ட வாகனங்கள் சிக்கின. இந்நிலையில், கர்டர் பாலத்தில் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணியை மேயர் இந்திராணி, ஆணையர் தினேஷ்குமார் பார்வையிட்டனர்.
வளிமண்டல கீழடுத்து சுழற்சியால் நேற்று (அக்.12) தமிழகத்தின் பல பகுதிகளிலும் கனமழை பெய்தது. மதுரை மாவட்டத்தில் நேற்று இரவு 9 மணிக்கு மேல் தொடங்கிய மழை சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக கொட்டி தீர்த்தது. மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த இடி மின்னலுடன் கூடிய கன மழை வெளுத்து வாங்கியது. மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றிலும் மாசி வீதிகள் முழுவதிலும் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. ஆங்காங்கே சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மழை நீரில் சாய்ந்துவிழுந்து இழுத்துச் செல்லப்பட்டன.
மதுரை ரயில் நிலையம் , ஆரப்பாளையம், கேகே. நகர், அண்ணாநகர், சிம்மக்கல், மாட்டுத்தாவணி திருப்பரங்குன்றம், ஆனையூர், கோரிப்பாளையம் பழங்காநத்தம், பைபாஸ் சாலை, அவனியாபுரம், வில்லாபுரம் , விமான நிலையம் , திருநகர் உள்ளிட்ட மாநகர் பகுதிகளில் அதிக அளவில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் போன்று தண்ணீர் புரண்டு ஓடியது. தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கி, வாகனங்கள் போக முடியவில்லை. சில போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது.
இதில் மதுரை மணி நகரம் ஒர்க்ஷாப் ரோடு பகுதியில் அமைந்துள்ள ரயில்வே தரைப்பாலத்தில் மழை நீரானது 5 அடி உயரத்திற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் பாலத்தை கடக்க முயன்ற காவல்துறை வாகனம் சிக்கியது. வாகனத்தில் இருந்த காவல்துறையினர் நீந்தி தப்பினர். தொடர்ந்து பின்னால் வந்த மற்றொரு காரும் சிக்கியது. காரில் இருந்த மூவரை காவல் துறையினர் பத்திரமாக மீட்டனர். மேலும், அந்த பாலத்தின் வழியே கடக்க முயன்ற டூவீலர்கள், ஆட்டோக்கள், சரக்கு வாகனங்கள் போன்ற வாகனங்களும் வெள்ள நீரில் சிக்கின.
மதுரை மாநகரின் மையப் பகுதியில் இரவு நேரத்தில் நேரத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் வாகனங்கள் சிக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வெள்ள நீருக்குள் கார் சிக்கி நீரில் மூழ்கியது சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.
மதுரை பழங்காநத்தம் பிரதான சாலையில் முல்லைப் பெரியார் கூட்டு குடிநீர் திட்ட பணிக்கு தோண்டிய பள்ளத்தால் குடிநீர் தொட்டிக்கு செல்லக்கூடிய குழாய் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் குடிதண்ணீர் வீணானது.
குடியிருப்புக்களுக்குள் புகுந்த தண்ணீர்; கன மழை காரணமாக மதுரை கரும்பாலை பகுதியில் தூய்மை பணியாளர்கள் வசிக்கும் பகுதியில் பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மதுரை அரசு மருத்துவனை வளாகத்திற்குள் மழை நீர் தேங்கியதால் நோயாளிகளுக்கு சிரமம் ஏற்பட்டது.
மழையின் காரணமாக மாட்டுத்தாவணி அண்ணாநகர், கேகே நகர், வண்டியூர், காமராஜர் சாலை, விளக்குத்தூண், தெற்கு வாசல், பழங்காநத்தம், காளவாசல், ஆரப்பாளையம், கோரிப்பாளையம், புதூர், அய்யர் பங்களா உள்ளிட்ட பகுதிகளில் மின்சார பாதிப்பும் ஏற்பட்டது. பழங்காநத்தம் பகுதியில் மின்சாரம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டது. இன்று காலை மின்சார பாதித்த பகுதியில் சீரமைக்கப்பட்டு மின் விநியோகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 16, 2024, 5:44 pm
தீபாவளிக்கான இலவச அரிசி, சர்க்கரை அக்.21-இல் ரேஷனில் வழங்கப்படும்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
October 15, 2024, 4:06 pm
சென்னையில் கனமழை: 5 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டன
October 13, 2024, 1:47 pm
ஆயுத பூஜை, விஜயதசமி தொடர்விடுமுறையில் விதிகளை மீறி இயங்கிய பேருந்துகள் பறிமுதல்
October 12, 2024, 7:08 am
சென்னை அருகே பயங்கர ரயில் விபத்து
October 11, 2024, 11:22 pm
விமானத்தில் கோளாறு: 2 மணி நேரம் திருச்சி வான்வெளியில் பறந்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது
October 11, 2024, 12:52 pm