செய்திகள் சிந்தனைகள்
இறைவன் புழங்குகிற இடம் எது தெரியுமா..? மௌலானா முஹம்மத் ஃபாரூக் கான் - வெள்ளிச் சிந்தனை
வெறுமனே வீண்செயல்களிலும் பொழுதுபோக்குகளிலும் செலவிடுவதற்காக மனிதனுக்கு மூளையும் இதயமும் தரப்படவில்லை.
மனிதனின் இதயம் இறைவன் புழங்க வேண்டிய இடம் ஆகும். குப்பைக் கூளங்களால் அது அலங்கோலப்படக் கூடாது. கண்டதையும் சேமித்து வைக்கின்ற கிடங்காகவும் அது இருத்தலாகாது. அவ்வாறு அது மாற்றப்படுகின்றது எனில் அதனை விட மோசமான ரசனை வேறு இல்லை என்றே சொல்ல வேண்டும்.
இதிலிருந்து இன்னொன்றையும் தெரிந்து கொள்ளலாம்.
பொறாமை, கள்ளம், கபடம், குரோதம், பேராசை, சுயநல சிந்தனை, தன்முனைப்பு போன்றவற்றால் தம்முடைய இதயத்தை நிறைத்து வைப்பவர்கள் உண்மையில் தமக்குத் தாமே கொடுமையிழைத்துக் கொள்கின்றவர்களாவர். ஒழுக்கரீதியாகச் சொல்லப்போனால் மிகப் பெரும் ஒழுக்கச் சீர்கேட்டில் விழுந்துவிட்டவர்களாவர்.
இதன் தவிர்க்க முடியாத விளைவாக அவர்கள் கோள் சொல்லுதல், புறம் பேசுதல், மற்றவர்களின் குறைகளைத் துருவித்துருவி ஆராய்தல், அவதூறு பரப்புதல் போன்ற ஒழுக்க நோய்களுக்கு ஆளாகித் தங்களின் நேரத்தை வீணடிக்கின்றார்கள். சமூகத்தில் குழப்பமும் பிணக்கும் வெடிப்பதற்குக் காரணமாகின்றார்கள்.
மனத்தின் மிக உயர்வான நிலை என்ன தெரியுமா? இறைவனை வணங்கி வாழ்வதும் இறைவனுக்கு முற்றாக அடிபணிந்து வாழ்வதும்தாம்.
மனித மனத்தின் ஆசைகளிலேயே விண்ணை முட்டுகின்ற ஆசை என்ன தெரியுமா? இறைவனுக்கு அடிபணிந்து வாழ வேண்டும் என்கிற ஆசைதான்.
இறைவனுக்கு அடிபணிந்து வாழ வேண்டும் என்கிற ஆசையும் உணர்வும் சுவையும் சாதாரணமானவையன்று. இந்தப் பேரண்டத்தில் இருக்கின்ற கணக்கற்ற வனப்புகளையும் அழகுகளையும் அந்த ஆசைக்காக விட்டுக் கொடுத்துவிடலாம்.
அந்த அளவுக்கு மதிப்புமிக்க சுவைதான் இறைவனுக்கு அடிபணிந்து வாழ வேண்டும் என்கிற ஆசை.
மன இச்சைகளின் பின்னால் தறிகெட்டு அலைவதைத் தவிர்த்து விட்டு இருபத்துநான்கு மணி நேரமும் இறைவனை மட்டுமே சார்ந்து வாழ்பவர்கள்தாம் இறைநம்பிக்கையாளர்கள் என்பதற்கு இறைநம்பிக்கையாளர்களின் ஒவ்வொரு ஸஜ்தாவும் சான்று.
நம்பிக்கையாளர்களின் வாழ்வின் இதயமாக இறைவன் ஆகி விடுவது இழப்புக்குரிய விஷயம் கிடையாது.
ஆனாலும் இந்த உலகில் மிகப் பெரும் எண்ணிக்கையில் எத்தகைய மனிதர்கள் வாழ்கின்றார்கள் தெரியுமா?
இறைவனுடைய விருப்பங்களுக்குப் பதிலாக தங்களுடைய அற்பமான ஆசைகளுக்கும் மலிவான ஏக்கங்களுக்கும் பின்னால் அலைபவர்கள்தாம் திரும்பும் திசையெல்லாம் மிகப் பெரும் எண்ணிக்கையில் தென்படுகின்றார்கள். இறைவனின் சட்டதிட்டங்களை விட தங்களின் மனஇச்சைகளுக்கு முன்னுரிமை தருகின்றவர்கள்தாம் அதிக அளவில் தட்டுப்படுகின்றார்கள்.
ஆனால், அந்தப் பேதைகளுக்குத் தெரியாது. அந்த அற்பமான ஆசைகளை விட, அந்த மலிவான விருப்பங்களை விட பன்மடங்கு அதிகமாக சொந்தம் கொண்டாடப்பட வேண்டியவன் ‘எனக்கே எனக்காகவாக’ கொண்டாடப்பட வேண்டியவன் - எல்லாராலும் இறைவன் என்று அழைக்கப்படுகின்றவன் - என்பது இந்தப் பேதைகளுக்குத் தெரிவதில்லை.
தமிழில்: லுத்ஃபி
தொடர்புடைய செய்திகள்
March 28, 2024, 6:48 am
இஸ்லாமிய வரலாற்றில் இன்று மறக்க முடியாத நாள்: நாம் பெற வேண்டிய படிப்பினை என்ன?
March 15, 2024, 7:40 am
ரமலான் வந்தது எதற்காக..? - வெள்ளிச் சிந்தனை
March 6, 2024, 12:21 pm
ஆரியத்தை வீழ்த்தி திராவிடத்தை காத்தவர்கள் குறித்து ஆளுநர் ரவியின் நச்சுக் கருத்துகள்
March 4, 2024, 10:50 pm
அம்பானி வீட்டு ஆடம்பர ப்ரீ வெட்டிங்! ரஜினியின் அறியாமையா? அருவெறுப்பா?
March 1, 2024, 3:28 am
உண்மையான வெற்றி என்ன தெரியுமா? - வெள்ளிச் சிந்தனை
February 23, 2024, 9:12 am
நிமிர்ந்து நில்..! - வெள்ளிச் சிந்தனை
February 16, 2024, 8:18 am
எங்கே நிம்மதி? - வெள்ளிச் சிந்தனை
February 9, 2024, 7:56 am
அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல்லும் நபிமொழியும்..! - வெள்ளிச் சிந்தனை
February 2, 2024, 8:31 am
நன்றி செலுத்த வேண்டாமா...? - வெள்ளிச் சிந்தனை
January 19, 2024, 9:48 am