நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

ஏ! உலகமே! என்னை விட்டுப் போய்விடு!

அறிஞர் மௌலானா அஸத் கீலானி திருமறையின் பக்கமும் திருநபியின் பக்கமும் நம் கவனம் இருக்க வேண்டியதன் அவசியத்தை யதார்த்தமாகவும் மிகக் கவலையுடனும் விவரிக்கும் மடல் இது. வாழ்வியலில் பெருமானாரின் (ஸல்) வழிகாட்டுதலின்படி நடந்தால் அது எத்தகைய மாற்றத்தை உண்டுபண்ணும் என்பதை அழகாக விளக்குகிறார். நுஸுல் குர் ஆன் சிறப்பு சிந்தனையாக இதனைத் தருகிறோம். 

அன்பு நண்பா!

எதனை வாசிக்க வேண்டும் என்று கேட்கிறாய்...!

குர்ஆன்தான். 

குர்ஆனிலும் மறுமை குறித்தும், மறுமை நாளின் நிலைமைகள் பற்றியும் விவரிக்கிற வசனங்களைத் திரும்பத் திரும்ப ஓது. 

அவற்றின் பொருளை வாசி. 

அவற்றுக்கு அறிஞர்கள் கொடுத்துள்ள வாசகங்களை ஆய்ந்து படி.

நபிமொழிகளில் கிதாபுல் ரகாக் பகுதியை வாசி.

இவற்றோடு அண்ணல் நபிகளாரின் அழகிய வரலாற்றையும் நபித்தோழர்களின் சீரிய வரலாற்றையும் வாசி. 

இவை யாவும் உன்னை 1400 ஆண்டுகளுக்கு முந்தைய அந்த சமூகச் சூழலுக்கே கொண்டு சென்று விடும். உள்ளம் புத்துணர்வு பெறும்.

தாம் ஏற்றுக் கொண்டிருந்த அழைப்புப் பணியை வெற்றிகரமாக, நேர்த்தியாக, அழகாகச் செய்து முடித்தவர்கள் அவர்கள். 

அவர்களின் ஒளிமயமான வாழ்க்கைதான் களைத்துப் போன பயணிகளுக்கு கலங்ரை விளக்கங்களாக பாதை காட்டும்; மகிழ்ச்சி ஊட்டும். 

முடிந்தால் திருமறையின் முப்பதாவது பாகத்தில் மறுமை நிலைமையைப் படம் பிடித்துக் காட்டும் அத்தியாயங்களையும், உள்ளங்களை நடுநடுங்கச் செய்து விடும் அத்தியாயங்களையும் படி.நேர்வழியில் சென்ற கலீஃபாக்கள் நால்வரின் வரலாற்றையும் படி. 

இவர்கள்தான் அசலானவர்கள். இவர்களின் காலடிச் சுவடுகளைப் பின்பற்றியே நாம் அசல் பணியாற்ற வேண்டியுள்ளது என்கிற எண்ணத்துடன் இவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் புரட்டிப் பார்.

அவர்களும்தான் வணிகம் செய்தார்கள். 

ஆனால் தராசின் ஒரு தட்டில் உலகப் பொருட்கள் இருந்தால் மறு தட்டில் இறைவனின் அச்சம் இருக்கும். துணிகளை அளக்கும் போது அவர்களுக்கு ஒரு நுனியில்தான் துணி தெரியும். மறு நுனியில் மண்ணறையின் முகத்துவாரம் தெரியும்.

ஒரு பக்கம் பெரும் பெரும் நிலப் பரப்புகளிலும் நாடுகளிலும் அவர்களுடைய ஆட்சி கொடி கட்டிப் பறக்கும். 

மறுபக்கம் இரவுகளில் இறைவன் முன்னால் அழுது அரற்றி, ஏ! உலகமே! என்னை விட்டு விலகிப் போய் விடு! என்னை மயக்கி விடாதே! நான் உனக்குத் தலாக் கொடுத்து விட்டேன் என்று புலம்புவார்கள்.

இவர்கள்தான் முன்மாதிரிகளாக, உலகின் வழிகாட்டிகளாக இருந்தார்கள். 

அவர்களைப் போன்றவர்கள் உலகில் பிறந்ததே கிடையாது. அவர்களின் அடிச்சுவடுகளில் தான் நாம் பயணிக்க வேண்டும். 

நமக்கு அந்த நற்பேறு மட்டும் கிடைத்து விட்டது எனில், என் நண்பனே! வாழ்க்கை பெரும் பெரும் தங்கச் சுரங்கங்களை விட மதிப்பு மிக்கதாக ஆகி விடும்! 

நம்முடைய சுவாசக் காற்றும், மூச்சும் ரத்தினங்கள், பவளங்களை விட மதிப்பு மிக்கதாக ஆகி விடும்.

அது மட்டுமல்ல, இன்னொரு உண்மையையும் நீ நன்றாக அறிந்து வைத்திருக்கிறாய். 

எந்த மந்திரக் கல்லைத் தொட்டதால் அவர்கள் சொக்கத் தங்கங்களாக ஆனார்களோ, அவர் கூட மக்களை படைத்தவனின் பக்கம் அழைப்பதற்காக செயற்களத்தில் குதிப்பதற்கு முன் தம்முடைய தேசத்தில் பெயர் பெற்ற வணிகராகத்தான் இருந்தார்.

ஆனால், அவர் தம் அதிபதியிடம் வாழ்க்கைக்கான பேரத்தைச் செய்த போது பணம் சம்பாதிப்பதற்கான வியாபாரத்தைக் கை விட்டார். 

பணம் பண்ணுவதற்குப் பதிலாக ஆளுமைகளைச் செதுக்குகிற வேள்வியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.

அவரால் செதுக்கப்பட்ட ஆளுமைகளுக்கு ஈடிணை இல்லை என்பதும் அவர்கள் மனித குல வரலாற்றிலேயே அரும்பெரும் பொக்கிஷங்களாக ஜொலித்தார்கள் என்பதும் உனக்குத் தெரிந்ததே.

வலது கையால் சாப்பிட வேண்டும் என்கிற சுன்னத்தான நபிவழியை இன்று முஸ்லிம்கள் அனைவருமே நினைவில் வைத்திருக்கின்றார்கள்.

ஆனால் அண்ணல் நபிகளார் (ஸல்) அவர்கள் தம்முடைய பொருள் முழுவதையும், செல்வங்கள் யாவற்றையும் அழைப்புப் பணிக்காக செலவிட்டு விட்டார்; பேரீச்சம் பாயைத் தவிர்த்து வேறெதனையும் விட்டுச் செல்லவில்லை என்கிற சுன்னத் - நபிவழி எத்தனை பேருடைய நினைவில் இருக்கிறது.

சத்திய மார்க்கத்தை உள்ளமும் மனமும் ஏற்றுக் கொண்டாலும் அதற்காக உழைக்கும் விஷயத்தில் அலட்சியப் போக்கு இருப்பது மிகப் பெரிய நோய் ஆகும். 
 
இந்த நோய்க்கு அடிமையாகிவிட்டதாக எழுதி இருக்கிறாய். 

இந்த நயவஞ்சக நோய்தான் நம்முடைய ஒட்டு மொத்த சமூக வாழ்வை உயிரற்றதாக ஆக்கி விட்டிருக்கிறது. 

ஒட்டுமொத்த சமுதாயம் தவிட்டுக் குவியலாக ஆகி நிற்கிறது. யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் அந்தத் தவிட்டுக் குவியலில் ஏறி நின்று ஆதிக்கம் செலுத்துகின்ற காட்சிகள் அன்றாடம் நடக்கத்தானே செய்கின்றன. 

- மௌலானா அஸத் கீலானி

தொடர்புடைய செய்திகள்

+ - reset