நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

பாரம்பரிய மற்றும் பாரம்பரிய மற்ற முஸ்லிம்களா?: இலங்கை முஸ்லிம்களை வேறுபடுத்திக் காட்ட முயற்சி: முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் காட்டம்

கொழும்பு:

இலங்கை முஸ்லிம்களை பாரம்பரிய முஸ்லிம்கள், பாரம்பரியமற்ற முஸ்லிம்கள் என இரண்டு பிரிவாக வேறுபடுத்திக் காட்டுவதற்கு  சிலர் முயற்சித்துக்கொண்டிருக்கின்றார்கள். அதற்காகத்தான் “ஒரு நாடு ஒரு  சட்டம்” என்ற செயலணியொன்றை அமைத்துக் கொண்டு மாவட்டம் மாவட்டமாக கூட்டம் நடத்தி திரிகின்றார்கள். இந்த விவகாரம் பெரும்பான்மை சமூகத்தவரிடத்திலும் கூட பலத்த கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் எழுதிய, இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளா்கள் பற்றிய ஆய்வு நூலான 'திதுலன தாரக்கா' (மின்னும் தாரகை), சனிக்கிழமை (04) , கொழும்பு அல்–ஹிதாயா தேசியப் பாடசாலை பஹார்தீன் கேட்போர் கூடத்தில் வெளியிட்டு வைக்கப்பட்ட போது , பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அங்கு உரையாற்றும் போது மேலும் தெரிவித்ததாவது:

இலங்கைப் பெண்கள் மத்தியில் சிறந்த  படைப்பாளிகள் இருக்கின்றார்கள் என்ற விடயத்தை நாடறிய செய்ய வேண்டுமென்ற நோக்கில் இந்த தொகுப்பை வெளியிட்டுள்ள நூறுல் அயின் சாமான்யமான பெண்ணொருவர் அல்லர். அவருடைய முழுக் குடும்பத்தையும் “கலைக் குடும்பம்” என்ற ழைக்கலாம். கண்டி மாவட்டத்தில் உடுதெனிய என்ற ஊரைச் சேர்ந்த அவர்,மொழிப் புலமை என்ற வகையில் சிங்களத்திலும், தமிழிலும் ஒரு சேர திறமை வாய்ந்தவர். அந்தக் கிராமத்தில் புகழ் பூத்த குடும்பத்தைச் சேர்ந்தவராவார்.

இந்நாட்டு அரசாங்கத்தின் ஊடகங்களின் தொடர்பாடல் விடயத்தில் முக்கியமான இலங்கை தகவல் திணைக்களத்தில் அவர்   நீண்ட காலமாக பணியாற்றியிருக்கிறார். கொழும்பு மாவட்ட செயலகத்திலும்  நூறுல் அயின் ஊடகத்துறையில் கடமையாற்றியுள்ளார்.அவரது வெற்றியில் மிக முக்கிய பங்குதாரரானஅவரது கணவர் நஜ்முல் ஹுஸைன்   நல்ல இலக்கியவாதியும், சிறந்த கவிஞருமாவார். 

இந்த நிகழ்வில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்களும் கலந்து சிறப்பிப்பதும் சாலப் பொருத்தமானதும்,மகிழ்ச்சிக்குரியதுமாகும்.

பெண் படைப்பாளிகள் என்ற விடயத்தில்,  எழுத்தாளர் சம்மேளனத்தின் செயலாளர் கமல் பெரேரா இங்கு கூறியவாறு, பெண் எழுத்தாளர்களுக்கு எல்லைச் சுவர்  எழுப்புவதில் ஆண்கள் முண்டியடித்துக்கொடுத்து தருகின்ற அவஸ்த்தையென்பது சங்கடமான விடயமாகவுள்ளது. அது மட்டுமல்லாது, உலமாக்கள் சிலரும், பள்ளிவாசல் நிருவாகங்களும் தலையிட்டு இவ்விடயம் தொடர்பில் “பத்வா”(மார்க்கத் தீர்ப்பு) வழங்குகின்ற விவகாரம் என்னைப் பொறுத்தமட்டில் மாறிவரும் இன்றைய சூழலில் முஸ்லிம் சமூகம் சம்பந்தமான தவறான பார்வையை ஏற்படுத்துவது மட்டுமல்லாது, எங்களது சமூகத்திலுள்ள பெண்களின் படைப்பாற்றலை ஊனப்படுத்துகின்ற செயலாகவும் அமைந்துவிடுவதை நான் பார்க்கின்றேன். தேவையற்ற இந்த தலையீடு என்ற விவகாரம் மிகவும் வேதனைக்குரியது. அவ்வாறு பெரும்பான்மையின சகோதரரான அவர் கூறுவதை அவரது புரிதலின் அடிப்படையிலேயே நாம் எடுத்து நோக்க வேண்டியுள்ளது. இந்தப் பிரச்சினை மிகவும் பூதாகரமாக வரக் கூடியது. இவ்விடயம் தொடர்பில் நாம் மிகவும் பக்குவமாக இருக்க வேண்டும்.

நல்ல படைப்பாற்றல் கொண்ட எழுத்தாளர்களின் ஆக்கங்களிலுள்ள சில சூட்சுமங்கள், இலக்கிய நயம், கற்பனை வளம் போன்றவற்றை இரசிப்பதை விடுத்து, ஒரு சாரார் வேறு எங்கேயோ சென்று அவற்றிலுள்ள குறைகளைத் துருவித் துருவித் தேடித் திரிகின்றனர். இது மிகவும் சங்கடத்திற்குரிய விடயமாகும். 

மீமெய்யியல்(Surrealism) என்ற விடயத்தை எமது நாட்டு கவிஞர்கள் கொண்டு வந்திருக்கின்றார்கள் என்பதை எண்ணி நாங்கள் பெருமைப்பட வேண்டும்.
இதைவிடுத்து ,தேவையில்லாத சர்ச்சைகளை கிளப்பிவிடக் கூடாது. இன்று பெரும்பான்மையினத்தவர்கள்கூட பெண் படைப்பாளிகள் தொடர்பில் விமர்சிக்குமளவுக்கு வந்திருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

 முஸ்லிம் சமூகத்திற்குள் எங்கெங்கெல்லாம் பிழைகளை கண்டுபிடிக்கலாமென ஓடித்திரிகின்ற கூட்டமொன்று உலாவரும் காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.  
பாராளுமன்றத்திலும் பெண்கள் சம்பந்தமாக நிறையப் புரளிகள் அவ்வப்போது கிளப்பப்படுகின்றன.

இந்த யுகம் மிகவும் வித்தியாசமானது. பெண்கள் சம்பந்தமான விடயங்களை தாங்கள் தான் நிர்வகிக்க வேண்டுமென ஆண்கள் நினைப்பது குடும்பத்தை மையப்படுத்தியே கூறப்பட்ட விடயமாகும். உழைக்கின்ற ஆண் குடும்ப நிர்வாகத்திற்குப் பொறுப்பாக இருப்பான் என்பதே இதன் கருத்தாக உள்ளது. இதர விடயங்களிலும் அவ்வாறு பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை. அதுபற்றிய திருக் குர்ஆன் வசனத்திற்கு சிலர் வித்தியாசமாகப் பொருள் கோடல் செய்கின்றனர்.

மேலும் ,எந்த தலைமை பதவிக்கும் பெண்கள் சரிவராது என்ற சொல்லுகின்ற காலமாகப் பார்க்க முடியாது. எங்கும் பெண்களுடைய தலைமைத்துவம் இருக்கின்றது. எத்தனையோ ஆண்கள் பாடசாலைகளுக்கு பெண்கள் அதிபராக இருக்கின்றார்கள். அரசியலில் கூட பெண்கள் உள்வாங்கப்படக் கூடாது எனக் கூறுவது இப்பொது இருக்கின்ற சூழலுக்கு ஒவ்வாத விடயமாகவே கருதப்படுகின்றது. அது பெண்களது வளர்ச்சிக்கு தடைபோடுகின்ற விடயமாக மாறிவிடுகின்றது. மேலும் இது சம்பந்தமான தவறான பார்வையை மாற்று சமூகத்தவர் மத்தியில் ஏற்படுத்திவிடுகின்றது.
 
இப்போது நாங்கள் செய்யத் தவறிய ஒரு விடயத்தை வைத்துக் கொண்டு, இன்றைய ஆட்சியாளர்கள் வேண்டுமென்று இந்நாட்டில் இடம்பெறக் கூடிய சகல விதமான தீவிரவாதத்திற்கும் காரணம் முஸ்லிம்களது தனியார் சட்டமெனச் சொல்கின்றார்கள். முஸ்லிம்களது விவாக, விவாகரத்து சட்டத்தை திருத்துகின்ற விவகாரத்தில் தேவையில்லாமல் ஆன்மீக மற்றும் அரசியல் தலைமைகளும் இழுத்தடிப்புச் செய்தமையே இன்று "குரங்கின் கையில் பூமாலை"யாக மாறியுள்ளது. இப்போது ஆட்சியாளர்கள்  தமக்கேற்றவாறு தயார்படுத்தவும், திரிபுபடுத்தவும் எமது குறைகளை அலசி ஆராய்கின்றனர். 

இப்போது எல்லோரும் வந்து மூக்கு நுழைக்கின்ற விடயமாக நாங்களாகவே இதனை ஆக்கிவிட்டோம். இப்போது இருக்கின்றதையும் பறிகொடுக்கக் கூடிய நிலைமை வந்துவிடாமல் எப்படியாவது எங்களுடைய தனியார் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும். 

மத்ரஸா பாடத்திட்டத்திலும் திருத்தங்களை மேற்கொள்ள முற்படுகின்றார்கள்.

முஸ்லிம்கள் மத்தியில் ஒவ்வொரு விதமான சிந்தனா வட்டங்கள் இருக்கின்றன. விதவிதமான கொள்கைகளின் அடிப்படையில் மேற்கொண்ட பாட விதானங்களை ஒருசேர அமைக்க வேண்டுமென நீண்ட காலமாக முஸ்லிம் சமய,கலாசார விவகாரத் திணைக்களம் ஈடுபட்டிருக்கின்றது. அதற்கான நல்ல பரிந்துரைகளை செய்தும் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் எழுந்தன. அவ்வாறிருக்க, இப்பொழுது அரபு மதரஸாக்களுக்கு மூடு விழா நடத்துவதற்கு அரசாங்கம் எத்தனித்து வருகின்றது.

வெளிநாட்டிலிருந்து பயங்கரவாதத்தை ஆய்வு செய்வதற்கென பேராசிரியர்கள் சிலரை இங்கு வரவழைத்துள்ளனர். ஜாமிஆ நளீமிய்யா தொடர்பிலும் கூட தேடிப் பார்க்கின்றனர். தேவையற்ற விபரீதங்களை இன்று முஸ்லிம்களுக்கு மேல் கொண்டுவருவதற்கான எத்தனங்கள் நடந்துக்கொண்டு இருக்கின்றன. இவற்றிலிருந்து மீள்வதற்கு எங்களுக்கு மத்தியிலும் மிக பக்குவமாகவும் நேர்மையாகவும் வாதாடிப் பெற்றுக்கொள்வதற்கான வழிவகைகள் இல்லாமல் இல்லை. ஆனால், அவற்றை பயன்படுத்தி இன்றிருக்கின்ற சூழலில் சில சக்திகள் முரண்டுபிடித்துக்கொண்டிருக்கின்றார்கள்.
 
இந்நாட்டிலுள்ள முஸ்லிம்களை பாரம்பரிய முஸ்லிம்கள், பாரம்பரியமற்ற முஸ்லிம்கள் என இரண்டு பிரிவாக வேறுபடுத்திக் காட்டுவதற்காக ஒருசிலர் முயற்சித்துக்கொண்டு இருக்கின்றார்கள். அதற்காகத் தான் “ஒரு நாடு ஒரு சட்டம்” செயலணியொன்றை அமைத்துக் கொண்டு மாவட்டம் மாவட்டமாக கூட்டம் நடத்தி திரிகின்றார்கள். இந்த விவகாரம் பெரும்பான்மை சமூகத்தவரிடத்திலும் கூட பலத்த கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது என்றார் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் 

"தினகரன் "மற்றும் "தினகரன் வாரமஞ்சரி"  பிரதம ஆசிரியர் செந்தில் வேலவா் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் , கௌரவ அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீா் மாக்கார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் காதர் மொஹைதீன் , முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவா் என்.எம். அமீன், முஸ்லிம் சமய பண்பாட்டு திணைக்களத்தின் பணிப்பாளா் முன்னாள் இராஜதந்திரி  எம். அன்சாா் ஆகியோர் உள்ளிட்ட பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset