செய்திகள் சிந்தனைகள்
பக்காத்தான் எதிர்காலம் எப்படி இருக்கும்... சிதறுமா... சாதித்துக் காட்டுமா? - ஓர் அரசியல் அலசல்
அரசியலில் எதிர்பாராத ஒன்று நடப்பது சகஜம். அதேசமயம் எதிர்பாராத ஒன்று தொடர்ந்து நடக்கிறது எனில், எதிர்பார்க்கப்படும் ஒன்றாக மாறிவிடும்.
மலேசியாவின் அடுத்த பிரதமராக அன்வார் இப்ராகிம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிக் கூட்டணியான பக்காத்தான் ஹராப்பான் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு மேற்குறிப்பிட்ட வரி பொருந்துவதாகச் சொல்கிறார்கள் அரசியல் கவனிப்பாளர்கள்.
அண்மையில் கூட அன்வார் பிரதமர் பதவிக்காகக் களமிறக்கப்பட்டார். ஆனால், அந்த முயற்சி மீண்டும் தோல்வியில்தான் முடிந்தது. அதன் பிறகு பக்காத்தான் வட்டாரங்களின் நிலைமை என்னவாக உள்ளது?
இது தொடர்பாக ஓர் அலசல் கட்டுரையை எழுதியுள்ளார் அரசியல் ஆய்வாளர் ஃபிலிப் கோலிங்காய்.
பக்காத்தான் தலைமைத்துவம் வயதான தம்பதியர்க்கு இணையாக உள்ளது. இதில் ஒரு வித்தியாசம் என்னவெனில், இந்தத் தலைமைத்துவத்தில் மூன்று பேர் உள்ளனர்.
பக்கத்தான் கூட்டணியைப் பொறுத்தவரை அதன் தொடக்ககால உறுப்பினர்களான பிகேஆர், ஜசெக மற்றும் அமானா நெகரா ஆகிய மூன்று கட்சிகளும் நீண்டகாலமாக உறவில் உள்ளன. கடந்த 1998ஆம் ஆண்டு துணைப் பிரதமர் பதவியில் இருந்து அன்வார் நீக்கப்பட்டது முதல் இந்த எதிர்க்கட்சிக் கூட்டணி நிலைத்து நீடித்து வருகிறது.
சுமார் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக Barisan Alternatif, பக்காத்தான் ரக்யாட், பக்காத்தான் ஹராப்பான், ஜசெகவின் லிம் குவான் எங், வாரிசான் தலைவர் முகமட் சாபு எனப் பல்வேறு விதமான எதிர்க்கட்சிக் கூட்டணிகளும் அவற்றின் தலைமைத்துவமும் பல தசாப்தங்களாக நீடித்து வரும் பாரிசான் நேசனல் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர முயற்சி செய்து வருவதைப் பார்த்து வந்தோம்.
இறுதியில், கடந்த 2018ஆம் ஆண்டு அதற்கான நேரம் வந்தது. அச்சமயம் பெர்சாத்து கட்சித் தலைவரும், இரு தலைமுறைகள் தங்கள் ஆதர்ச எதிரியாக விளங்கியவருமான துன் மகாதீர் துணையோடு தேசிய முன்னணியை வீழ்த்தியது பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி.
தற்போது துன் மகாதீரும், பெர்சாத்துவும் பக்காத்தான் ஹராப்பானுடன் இல்லை. எனவே பக்காத்தான் பழையபடி மூன்று கட்சிகளைக் கொண்ட கூட்டணியாகவும், அவற்றின் மூன்று தலைவர்களுடனும் செயல்படுகிறது. இந்த உறவைத்தான் மணமான தம்பதியருடன் ஒப்பிட்டுள்ளார் கட்டுரையாளர்.
வயதான தம்பதியரைப் போல் தங்களுக்கு இடையேயான பேதங்களை பெரிதுபடுத்தாமல், தங்கள் பிள்ளைகளுக்காக - அதாவது எதிர்க்கட்சி வாக்காளர்களுக்காக ஒன்றாக உள்ளனர் என்கிறார் ஃபிலிப் கோலிங்காய்.
அன்வார் தான் பிரதமர் வேட்பாளர் என்பதில் பக்காத்தான் உறுதியாக இருக்குமா?
அடுத்த பொதுத்தேர்தல் வரை பிரதமர் வேட்பாளர் அன்வார்தான் என்ற முடிவில் பக்காத்தான் ஹராப்பான் உறுதியாக இருக்குமா என்ற கேள்வி இப்போது எழுகிறது.
அன்வாருக்குப் பிறகு யாருடைய தலைமைத்துவம் என்ற கேள்வி குறித்து இப்போது ஜசெக, அமானா... ஏன் பிகேர் கட்சித் தலைவர்கள் சிலரும் கூட யோசிக்கத் தொடங்கி உள்ளனர். காரணம், பிரதமராகும் தனது கனவை நனவாக்க அன்வார் மேற்கொண்ட முயற்சிகள், இன்று நேற்றல்ல.... 1998ஆம் முதற்ஒண்டு தோல்வியில்தான் முடிந்து வருகிறது. இதோ... அண்மைய முயற்சிக்கும் அதே கதிதான் ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு முறையும் பதவிக்கு மிக அருகில் வந்து போகிறார் அன்வார். ஆனால் வெற்றி மட்டும் வசப்படவில்லை.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அரசாங்கம் வீழ்ந்ததும், அன்வாருக்குப் பதில் வேறொரு வேட்பாளரை பிரதமர் பதவிக்கு களமிறக்குவது குறித்து யோசித்தது பக்காத்தான் ஹரப்பான். அவர்களின் பார்வை பாரிசான் சபாவின் தலைவரான டத்தோஸ்ரீ ஷஃபி அப்டால் பக்கம் திரும்பியது. அவரால் பாரிசான் பெஜுவாங் மற்றும் இதர எம்பிக்களின் ஆதரவைப் பெற முடியும் என அவர்கள் வாதிட்டனர்.
எனினும், இறுதியில் பக்காத்தான் தலைமைத்துவம் ஷஃபி அப்டாலுக்கு பதில் அன்வாரைத்தான் பிரதமர் வேட்பாளராக முடிவு செய்தது. எட்டு எம்பிக்களை தன்வசம் வைத்துள்ள ஷஃபி அப்டால், பிரதமர் பதவிக்கான் போட்டியில் இருந்து விலகினார். இதன் மூலம் எதிர்க்கட்சிகளின் ஒரே வேட்பாளராக அன்வார் அறிவிக்கப்பட்ட நிலையில், அம்னோவின் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகூப் 114 எம்பிக்களின் ஆதரவோடு பிரதமர் ஆனார். இத்தனைக்கும் அன்வார் வசம் 105 எம்பிக்கள் இருந்தனர்.
அவருக்கும் பிரதமர் பதவிக்கும் இடையே 6 எம்பிக்கள் என்ற கணக்கு மட்டுமே இருந்தது. ஆனால் அன்வார் தன் முயற்சியில் தோல்வி கண்டார். எனவேதான் மீண்டும் ஒரு கேள்வி எழுகிறது.
அன்வாருக்குப் பதிலாக எதிர்வரும் 15ஆவது பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வேறொருவரை பிரதமர் வேட்பாளராக களமிறக்க முன்வருமா என்பதுதான் அது.
பிகேஆர் பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நவ்ஸ்டன் இஸ்மாயிலா? பிகேஆரின் நூருல் இஸா அன்வாரா? அமானாவின் எம்பியான டத்தோஸ்ரீ டாக்டர் ஸுல் கிஃப்லி அஹமடா? அமனாவின் அட்லி ஸஹாரியா? அல்லது ஷஃபி அப்டாலா?
இவ்வாறு பலரது பெயர்கள் பலருக்கும் நினைவில் வந்து போகின்றன.
வயதான தம்பதியர் போன்ற பக்காத்தான் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாது
"எனினும், பக்காத்தான் கூட்டணி என்பது வயதான தம்பதியர் போன்றது என்பதால் அதன் தலைமைத்துவமானது அன்வார்தான் பிரதமர் வேட்பாளர் என்ற முடிவையே எடுக்கும் என்று என்னிடம் கூறப்பட்டது. இது தொடர்பாக பிகேஆர் கட்சிக்குள் ஒரு முடிவு எடுக்கப்படாத வரை ஜசெகவும், அமானாவும் தங்கள் மனதை மாற்றிக்கொள்ள வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
"அண்மையில் அன்வார் தலைமையில் பக்காத்தான் கூட்டணியை வலுப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது என பக்காத்தான் உச்ச மன்றம் முடிவெடுத்துள்ளது.
"எனினும் நீண்ட கால திருமண பந்தங்களில் ஏற்படுவது போல் பக்காத்தான் உறுப்புக் கட்சிகள் சில தருணங்களில் அலைபாய்கின்றன. அவற்றின் கண்கள் புதிய கூட்டாளிகளைத் தேடுகின்றன.
"உதாரணமாக, டான்ஸ்ரீ மொஹைதின் யாசினுடன் ஜசெக திடீரென நெருக்கமானது போன்ற ஒரு தோற்றம் அண்மையில் ஏற்பட்டது. உத்தரவாதம் மற்றும் விநியோக ஒப்பந்தம் தொடர்பாகவும் வேறு சில அம்சங்கள் குறித்தும் அப்போது பிரதமாக இருந்த மொஹைதின் யாசினிடம் பேச்சுவார்த்தை நடத்த ஜசெக கட்சி எம்பிக்களுக்கு லிம் குவான் எங்கின் மறைமுக ஆசி இருந்ததாக கூறப்படுகிறது.
"இதே போல் அம்னோ தேசியத் தலைவர் ஸாஹித் ஹமிதிக்கும் அன்வாருக்கும் இடையே தொடர்பு உள்ளது என ஜசெகவும் அமானாவும் கருதுவதாக ஒரு தகவல் வெளியானது. தாம் பிரதமராக ஸாஹித் ஹமிதியின் ஆதரவை அன்வார் எதிர்பார்ப்பதாக கூறப்பட்டது.
தேர்தலுக்குப் பின் பக்காத்தான் கட்சிகள் அணிமாறக் கூடும்
"எதிர்வரும் தேர்தல் வரை பக்காத்தான் உறுப்புக் கட்சிகள் ஒன்றாக இருக்கக்கூடும். ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் அடுத்த ஆட்சியை அமைக்கும் பொருட்டு அக்கட்சிகள் பக்காத்தான் ஹரப்பானை ஒதுக்கிவிட்டு அணிமாறும் வாய்ப்புண்டு," என்று சில வட்டாரங்களை மறைமுகமாக மேற்கோள் காட்டி ஃபிலிப் கோலிங்காய் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற பக்காத்தான் உச்ச மன்றக் கூட்டத்தில், எதிர்வரும் தேர்தலில் அக்கூட்டணியின் கொடியைப் பயன்படுத்த வேண்டும் என ஜசெகவும் அமானாவும் வலியுறுத்தின. ஆனால், பிகேஆர் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. தோல்வி அடைந்த பக்காத்தான் அரசின் சின்னமாக அக்கூட்டணியின் கொடி மாறிவிட்டது என்று குறிப்பிட்ட அன்வார் தரப்பு, பிகேஆர் கட்சிக்கொடியைப் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தியது.
இறுதியில், ஒவ்வொரு கட்சியும் சொந்தக்கொடியில் போட்டியிடலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்தலுக்கு முன்பு எதிரிகளை வீழ்த்த மேலும் சில கட்சிகளை பக்காத்தானுக்குள் கொண்டு வர பிகேஆர் விரும்புகிறது. அதன் எதிரொலியாக கடந்த வியாழக்கிழமை, ஒரேயொரு எம்பியைக் கொண்ட United Progressive Kinabalu Organisation கட்சி பக்காத்தானின் பெரிய கூடாரத்துக்குள் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், வாரிசான் கட்சி பக்காத்தானில் இணையுமா? எனும் கேள்வியும் எழுகிறது.
அன்வாரும் ஷஃபி அப்டாலும் இன்னமும் கூட பிரதமர் பதவிக்கான போட்டியில் உள்ளனர். எனவே, இரு தரப்பும் நாடாளுமன்றத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்நோக்கி உள்ளன.
இஸ்மாயில் சப்ரி தோற்கும் பட்சத்தில், பிரதமராகும் வாய்ப்பு தங்களுக்கு இருப்பதாக இருவரும் கருதக்கூடும். நம்பிக்கை வாக்கெடுப்பில் தங்கள் தரப்பால் புதிய பிரதமருக்கு சிக்கல் எழாது என்று அன்வார் கூறியுள்ள போதிலும், அவர் தன் மனதை மாற்றிக்கொண்டால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
2021 ஏப்ரல் மாதம் தாங்கள் இனிமேலும் பக்காத்தான் பிளஸ் கூட்டணியில் இல்லை என்று பகிரங்கமாக அறிவித்தார் ஷஃபி. எனவே, வாரிசானும் பிகேஆரும் பிரதமர் பதவி மீதான விருப்பம் காரணமாக பிரிந்துகிடப்பதாகத் தெரிகிறது.
எனினும், பக்காத்தானை விட்டு விலகி மாற்று எதிர்க்கட்சி கூட்டணியை அமைக்கும் பொருட்டு பெஜுவாங் மற்றும் மூடா கட்சிகளுடன் இணைய முற்பட்டால் வாரிசான் அரசியல் களத்தில் தனித்துவிடப்பட வாய்ப்புள்ளதாகவும் ஒருசிலர் கருதுகின்றனர்.
அன்வாருடன் மறைமுக மோதலில் ஈடுபடுவதை ஷஃபி அப்டால் தொடரும் பட்சத்தில், தொகுதிப் பங்கீட்டின்போது அக்கட்சி கழற்றிவிடப்பட வாய்ப்புள்ளது. ஏனெனில், பக்காத்தான் உறுப்புக் கட்சிகளுக்கிடையே இப்போதே தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது.
வயதான தம்பதியர் போன்ற பக்காத்தான் கூட்டணியில் பிரிவு ஏற்பட்டால் ஒழிய, அன்வார்தான் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் என்ற நிலைப்பாட்டில் இருந்து அந்தக் கூட்டணி மாற வாய்ப்பில்லை என்பதை ஷஃபி அப்டாலும், மற்றொரு தரப்பினரும் உணர வேண்டியது அவசியம் என்று தமது அலசல் கட்டுரையில் ஃபிலிப் கோலிங்காய் மேலும் தெரிவித்துள்ளார்.
- அறிவுக்கரசு
தொடர்புடைய செய்திகள்
March 28, 2024, 6:48 am
இஸ்லாமிய வரலாற்றில் இன்று மறக்க முடியாத நாள்: நாம் பெற வேண்டிய படிப்பினை என்ன?
March 15, 2024, 7:40 am
ரமலான் வந்தது எதற்காக..? - வெள்ளிச் சிந்தனை
March 6, 2024, 12:21 pm
ஆரியத்தை வீழ்த்தி திராவிடத்தை காத்தவர்கள் குறித்து ஆளுநர் ரவியின் நச்சுக் கருத்துகள்
March 4, 2024, 10:50 pm
அம்பானி வீட்டு ஆடம்பர ப்ரீ வெட்டிங்! ரஜினியின் அறியாமையா? அருவெறுப்பா?
March 1, 2024, 3:28 am
உண்மையான வெற்றி என்ன தெரியுமா? - வெள்ளிச் சிந்தனை
February 23, 2024, 9:12 am
நிமிர்ந்து நில்..! - வெள்ளிச் சிந்தனை
February 16, 2024, 8:18 am
எங்கே நிம்மதி? - வெள்ளிச் சிந்தனை
February 9, 2024, 7:56 am
அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல்லும் நபிமொழியும்..! - வெள்ளிச் சிந்தனை
February 2, 2024, 8:31 am
நன்றி செலுத்த வேண்டாமா...? - வெள்ளிச் சிந்தனை
January 19, 2024, 9:48 am